ராமதாஸ் கைது: இரவு பேருந்து பேருந்துகள் ரத்து... விழுப்புரத்தில் பாலத்தை தகர்க்க சதி
சென்னை: ராமதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாமகவினர் நேற்றும் போராட்டம், மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது.
விழுப்புரம் வெடி வைத்து பாலத்தை தகர்க்க முயற்சி நடந்ததை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற வன்முறையில் 5 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. 200 வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்துகள் நிறுத்தம்
ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும், பேருந்துகள் இரவில் நிறுத்தப்பட்டன.
இரவு 10 மணிக்குப் பிறகு சென்னை கோயம்பேட்டில் இருந்து, தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகினர். அவர்களில் பெரும்பாலோனோர் பேருந்து நிலையத்திலேயே தங்கினர்.
கிழக்குக் கடற்கரைச் சாலை
இதேபோல், புதுச்சேரியிலிருந்து, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இரவு நேரத்தில் சென்னைக்குச் வர வேண்டிய பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் செல்லும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூரில் இரவு நேரப் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. கும்பகோணத்திலிருந்து, சென்னை செல்லும் பேருந்துகள் தஞ்சாவூர், திருச்சி வழியாக திருப்பி விடப்பட்டன. கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டதால், அதில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
பாலத்தை தகர்க்க சதி
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கரசானூர் பாலத்தில் நேற்றிரவு 2 மணி அளவில் வெடிகுண்டு வெடித்ததில் பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் தடையயியல் நிபுணர்கள் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து மேலும் 5 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு தீவைப்பு
இதேபோல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் எம்ஜிஆர் சிலை மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், சிலையின் கால் பகுதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த நகர அதிமுகவினர், பாமகவினருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்தவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலைக்கு தீ வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
கொலை வழக்காக மாற்றம்
மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்து என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேதப் பரிசோதனையின்போது விபத்துக்கான அறிகுறிகள் தென்படாததால் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக பாதிப்பு
மேட்டூரில் 2- வது நாளாக கிராமபுரங்களுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மேட்டூர்-சேலம், மேட்டூர்-ஈரோடு ஆகிய வழித்தடங்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. மத்தூர் பகுதியில் இருந்து தர்மபுரி, திருப்பத்தூர், போச்சம்பள்ளி செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்தங்கரை, பெங்களூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
கிராம பகுதிகளுக்கு பஸ்கள் ஏதும் இயக்கப்படாததால் மேட்டூர் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் சரக்கு வாகனம், மற்றும் வாடகை கார் ஆகியவற்றின் மூலம் பயணிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வருகிறார்கள்.
55 ஹோண்டா வாகனங்கள் நாசம்
இதனிடையே நேற்று இரவு ஹரியானா மாநிலம் ஹோண்டா நிறுவனத்திலிருந்து கடலூருக்கு 55 புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. நேற்று இரவு சுமார் 1 மணியளவில் திருவண்ணமாலை அடுத்த ஐய்யம்பாளையம் ஏரி அருகே லாரி வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கண்டெய்னரில் இருந்த 55 இருசக்கர வாகனங்கள் நாசமாயின. இதில் லாரி ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications