விருதுநகரைச் சேர்ந்த பிஎச்டி மாணவர் ஹைதராபாத் பல்கலை.யில் தூக்கு போட்டு தற்கொலை

ஹைதராபாத்தில் உள்ள English and Foreign Languages University-ல் அரபு மொழி குறித்து பிஎச்டி ஆய்வில் ஈடுபட்டிருந்தவர் விருதுநகரைச் சேர்ந்த மொகியுதீன் (33). இவரது ஆய்வு முடிந்துவிட்ட நிலையில் நேற்று இறுதித் தேர்வு (viva voce) நடக்க இருந்தது.
இந் நிலையில் பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள மசூதி அருகே இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழில் அவர் எழுதியிருந்த தற்கொலைக் கடிதத்தில், நான் எனது வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டேன். மன அழுத்தம் தாங்க முடியவில்லை. எனது மரணம் குறித்து என் தங்கையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது.
இவரது viva voce நேர்காணலை பல்கலைக்கழகம் வேண்டுமென்றே பலமுறை தாமதப்படுத்தி வந்ததால் தான் அவர் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.
மேலும் இவரது உடலைப் பார்க்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், உடலை போஸ்ட்மார்ட்டம் முடித்து உடனுக்குடன் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொகியுதீனின் பெற்றோர் மரணமடைந்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் இவரது உடலை அவரது சகோதரியும் இரு சகோதரர்களும் பெற்றுக் கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பிஎச்டி மாணவரும் இதே பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications