மதுரையில் போலி தங்க நாணயம் தந்து மோசடி செய்த பெண் ஓராண்டுக்குப் பின் குழந்தையுடன் கைது!
மதுரை: மதுரையில் போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றிய பெண் ஓராண்டுக்குப் பின் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். இன்னொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சிந்தாமணியை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண்ணை ஏமாற்றி 15 போலி தங்கக் நாணயங்களைத் தந்துவிட்டு ரூ. 30,000 வாங்கிச் சென்றனர் இரு பெண்கள். இதையடுத்து அந்தப் பெண்கள் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மல்லிகா மறைத்து விட்டார்.
இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் மல்லிகா தவிட்டுசந்தை பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார். அப்போது முன்பு போலி தங்க காசு கொடுத்தவர்களில் ஒரு பெண், கைக்குழந்தையுடன் நிற்பதை பார்த்தார். உடனே அந்த பெண்ணை பிடித்து விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மீனாட்சி (23) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது, தனது உறவுக்காரப் பெண்ணான வள்ளியும் (21) தானும் தங்க நாணயங்களைக் கொடுத்து பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அவை போலி என்று எனக்கு தெரியாது என்றும், வள்ளி தான் அதைக் கொடுத்தார் என்றும் கூறினார்.
தனது கணவர் கட்டிட வேலைக்காக மதுரை வந்துள்ளதால் அவரைப் பார்க்கவே கைக்குழந்தையுடன் வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications