பாமக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு அளிக்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் 25ம் தேதி பாமக சார்பில் சித்திரை திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த சில நிபந்தனைகளுடன் பா.ம.க.வினருக்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி வழங்கினார்.
ஆனால், இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பா.ம.க.வினர் மீறியுள்ளனர். மேலும் 3 அரசு பேருந்துகள், 3 தனியார் வாகனங்கள், துணை சூப்பிரண்டுகளின் வாகனங்கள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். மேலும், மரக்காணத்தில் அப்பாவி தலித் மக்கள் மீது கொடூரமாக தாக்கல் நடத்தி, அவர்களது வீடுகளை பாமகவினர் தீ வைத்து எரித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை சேப்படுத்தியுள்ளனர். இருபிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி, அரசியல் சட்டத்துக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிராக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் பாமகவினருக்கு எதிராக தாம் வழக்கு தொடர்ந்ததால், தம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தமது அலுவலகத்தை பாமகவினர் தாக்கியுள்ளனர். இதனால் தமக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வாராகி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications