சீனாவில் ஆட்டுக்கறி சாப்பிடப் போறீங்களா? பாத்து அது எலிக்கறியா இருக்கப் போகுது
பீஜிங்: சீனாவில் எலிக்கறி, நரிக்கறி ஆகியவற்றை ஆட்டுக்கறி என்று கூறி விற்பனை செய்து வந்த 904 பேரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் குதிரை கறியை மாட்டுக் கறியுடன் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவில் எலிக் கறி, நரிக்கறியை ஆட்டுக் கறி என்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆட்டுக்கறி என்ற பெயரில் எலி மற்றும் நரிக்கறியை விற்ற குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இருந்து இதுவரை 904 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெய் என்பவர் ரசாயணங்களை கலந்து எலி மற்றும் நரிக்கறியை ஷாங்காய் மற்றும் ஜியாங்சு மாகாணத்தில் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சீனா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 20,000 மெட்ரிக் டன் போலி கறி பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் சீனாவில் பறவைக் காய்ச்சல் பரவியதால் மக்கள் கோழிக்கறி சாப்பிட அஞ்சினர். இதனால் கிழக்கு சீனாவில் கோழிக்கறி விற்பனை 80 சதவீதம் குறைந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஷாங்காயில் உள்ள ஒரு முக்கிய நீர் ஆதாரத்தில் 16,000க்கும் மேற்பட்ட அழுகிய பன்றிகள் மிதந்தன. இந்நிலையில் ஆட்டுக்கறியை சாப்பிடலாம் என்று நினைத்தால் அது எலிக்கறி, நரிக்கறியாக இருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications