ஜூலை 21ல் மும்பை, ஹைரதாபாத், பெங்களூரில் குண்டுகள் வெடிக்கும்: அல் ஜிகாத் மிரட்டல் கடிதம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அல் ஜிஹாத் லோகோவுள்ள கடிதம் ஒன்று வந்தது. அதில் மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள பொது இடங்கள் மற்றும் அமெரிக்க தூதரகங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மும்பை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின்படி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தான் அவர்கள் குறி வைத்துள்ளனர். மிரட்டல் விடுத்துள்ளவர்கள் அமெரிக்க அதிகாரிகள் தூதரகங்களை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூலை மாதம் 21ம் தேதி ஹைதராபாத், பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள பொது இடங்கள், ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மும்பையில் உள்ள அமெரிக்க தூரகத்தில் குண்டு வெடிக்கும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜிகாத் என்று ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை. அதனால் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பு இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.