மாதவரம்: கேஸ் கசிந்து வீடு தீப்பிடித்தது: கணவன்-மனைவி, மகன் படுகாயம்
சென்னை: சென்னை, மாதவரத்தில் கேஸ் கசிந்து வீடு தீப்பிடித்ததில் கணவன்-மனைவி, மற்றும் மகன் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு பரசுராமன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மனைவியின் பெயர் சரஸ்வதி. தச்சு தொழிலாளியான இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். வழக்கம்போல நேற்று இரவு அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிள்ளனர். அப்போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் வீடு முழுவதும் கேஸ் பரவி இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை.
இதை உணராத சரஸ்வதி பால் காய்ச்சுவதற்காக காலையில் அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதனால் வீடு முழுவதும் பரவி இருந்த கேஸ் பற்றி எரிந்தது..
இவ்விபத்தில், சரஸ்வதி மற்றும் அறையில் தூங்கிய ராதாகிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் உடலிலும் தீப்பிடித்தது. வீடு பூட்டி இருந்ததால் தீயின் வேகத்தில் கண்ணாடி ஜன்னல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. மேலும் வீட்டில் இருந்த மற்ற பொருட்களும் பற்றி எரிந்தன.
சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் , தீயை அணைத்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ராதாகிருஷ்ணன், சரஸ்வதி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராதாகிருஷ்ணன் கடந்த 1-ந்தேதி தான் பக்கத்து தெருவில் இருந்து மாறி இங்கு புதிதாக வாடகைக்கு குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து குறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.