கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு?பாஜக- ம.ஜனதா தளம் இடையே கடும் போட்டி!!

பொதுவாக சட்டசபை தேர்தலில் 2-வது இடம் பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சியாக விளங்கும். ஆனால், கர்நாடகத்திலோ பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே தலா 40 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைய இந்த இரு கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் 10 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் யாராவது எந்தக் கட்சியிலாவது இணைந்தாலோ அல்லது ஆதரவு அளித்தாலோ அந்தக் கட்சியின் பலத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. மே 28ம் தேதி நடைபெறும் பிரியாபட்டணா தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றால் அந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதில் வேறு கட்சி வென்றுவிட்டால், சட்டமன்றத் தேர்தலில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் அளவை வைத்து எதிர்க் கட்சி அந்தஸ்து தரப்படும்.
காங்கிரஸ் தடுத்து நிறுத்திய கெளடா:
மாநிலம் முழுவதுமே காங்கிரஸ் பெரும் அளவில் வெற்றி பெற்றாலும் தென் கர்நாடகத்தில் தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் அதிக அளவில் வென்று காங்கிரசின் வெற்றி அணிவகுப்புக்கு கொஞ்சம் பிரேக் போட்டுவிட்டது. இந்தப் பகுதிகளில் கெளடாவின் கட்சி கொஞ்சம் சளைத்திருந்தாலும் காங்கிரஸ் வென்ற இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.
காங்கிரஸை கெளடா தடுத்து நிறுத்தியதைப் போல பாஜகவால் அதன் கோட்டைகளிலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது.












Click it and Unblock the Notifications