ஜெயா டிவி நிர்வாகத்தில் சசி: உற்சாகத்தில் உறவினர்கள்!

'நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால், அதில் மும்முரமாக வேலைகளை கவனிக்க நினைக்கும் ஜெயலலிதா, ஜெயா டி.வி-யின் பணிகளை இனிமேல் சசிகலா இருந்து கவனிப்பார் என்று ஒரே வார்த்தையில் நிர்வாகிகளிடம் கட்டளையிட்டாராம்.
கார்டனுக்குள் மறுபடியும் சசிகலா வந்தாலும் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடந்த சிறப்பு வழிபாட்டிலும் அவருக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது ஜெயா டிவியின் நிர்வாகப் பொறுப்பில் அமர்ந்துள்ளார் சசிகலா.
திருப்தியளிக்காத நிர்வாகம்
ஜெயலலிதாவின் மனமாற்றத்துக்குக் காரணம், ஜெயா டி.வி-யின் செயல்பாடுகள்தான் என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மூன்று டீம்கள் ஜெயா டி.வி-க்குள் வந்துவிட்டன. டி.டி.வி.தினகரன் மனைவி அனுராதாதான் பல ஆண்டுகளாக ஜெயா டி.வி-யை கவனித்து வந்தார். சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நீக்கப்பட்ட பிறகு, அனுராதாவும் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
விலக்கப்பட்ட சுனில்
கே.பி.சுனில் அதன் பொறுப்புக்கு வந்தார். மத்திய அரசில் நிதித் துறைப் பொறுப்புகளைக் கவனித்துப் பழகிய ஒருவரும் இதைக் கவனித்து வந்தார். இப்போது இந்த இருவருமே ஜெயா டி.வி. நிர்வாகத்தில் இல்லை.
ரஃபி பெர்னாட் அதிரடி
சுனில் விலகிய பின்னர் ஜெயா டி.வி-யைக் கவனிக்க அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி-யான ரஃபி பெர்னாட் நியமிக்கப்பட்டார். ஆனால் ரஃபி பெர்னாட் டீம் அதிரடி மாற்றங்களுடன் பல்வேறு பணிகளில் இறங்கவே தனது நம்பிக்கைக்குரிய ஒருவர் டி.வி. நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தாராம்.
நம்பிக்கைக்குரிய சசி
சசிகலாவைத் தவிர வேறுயாரும் தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப நடந்துகொள்ள முடியாது என்று நினைத்த முதல்வர் ஜெயா டிவியின் பொறுப்புகளை கொடுத்துள்ளார்.
நீக்கம் - சேர்ப்பு
உறவுகளிடம் எழுந்த மனக்கசப்பினால் உயிர்த்தோழி என்றும் பாராமல் சசிகலாவை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அதுவரை சசி வகித்துவந்த நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. பொறுப்புக்களில் இருந்தும் நீக்கினார். இப்போது, மீண்டும் ஜெயா டி.வி. பொறுப்புகளைக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.
உறவுகள் உற்சாகம்
கார்டனில் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உறவினர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளதாம். ராஜ்ய சபா தேர்தல் நெருங்கி வருவதால், அதைக் கைப்பற்ற சசிகலாவின் உறவினர்களைப் பிடிக்க சிலர் முயற்சித்த தகவல் தலைமைக்கு வந்ததாம். ஆனால், சென்னையைவிட்டு வெளியே போய்விடுங்கள்' என்று எச்சரிக்கை விடுத்த பிறகு உறவினர்கள் அப்படியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த தொடர்பும் இல்லை
கமலின் விஸ்வரூபம் விவகாரம் வெடித்த போது, ஜெயா தொலைக்காட்சிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications