வேலூரில் 108 டிகிரி, திருச்சியில் 107 டிகிரி: அடிக்குது அனலு.... அதுசரி அதுசரி!

கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடக்கநாளன்று வெயிலின் உக்கிரம் குறைவாகவே காணப்பட்டது. சில இடங்களில் மழையும் பெய்தது.
வேலூரில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்தினம் 107 டிகிரி வெயில் பதிவானது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஆனால் அதன் பிறகு வெயில் படிப்படியாக குறைந்து வந்தது. கத்திரி தொடங்கிய 4ம் தேதி 105.4 டிகிரியாக இருந்தது. 5ம் தேதி 102.5, 6ம் தேதி 100 டிகிரி என வெயில் பதிவானது. அதன் பிறகு வெயில் மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் 104.5 டிகிரியாக பதிவான வெயில் நேற்று அதிரடியாக உயர்ந்து 108.1 டிகிரி பதிவானது.
நேற்றைய வெயில் (பாரன்ஹீட்)
வேலூர் தவிர பிற இடங்களில் வெயில் சதமடித்தது. திருச்சி 107, பாளையங்கோட்டை 105, தருமபுரி, கரூர் பரமத்தி வேலூர், திருப்பத்தூர் 104, மதுரை, சேலம் 103, சென்னை 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது. கோவை, கடலூர், நாகப்பட்டினம் 97, புதுச்சேரி 96, கன்னியாகுமரி 91, கொடைக்கானல் 71 டிகிரி வெயில் பதிவானது.
அனல் காற்று
நேற்று வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்பட்டனர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. கானல் நீரும் தென்பட்டது. இதனால் பிற்பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிபட்டனர். இரவிலும்கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர். அக்னி வெயில் காலம் இன்னும் 28 ம் தேதி வரை இருப்பதால் அதுவரை அனலில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று மக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்
கோடையில் மழை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக புதன்கிழமை சிவகங்கை, பெரியகுளம், விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக தென்தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications