வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து மீது கல்வீச்சு: பயணி மரணம்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே நள்ளிரவில் அரசுப்பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
சிதம்பரத்தில் இருந்து சேலத்திற்கு செல்லும் அரசுப்பேருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை மறித்த மர்மகும்பல் ஒன்று திடீரென்று பேருந்தின் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த ஈரோட்டைச் சேர்ந்த செல்வம் என்ற பயணி படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி செல்வம் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு நேரங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டதால் கடந்த மே 1ம் தேதி முதல் 5 நாட்கள் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த இரு நாட்களாக இரவு நேர பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மர்மநபர்கள் பேருந்து மீது தாக்கி பயணி உயிரிழக்க காரணமாகிவிட்டனர். இந்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications