பலத்த பாதுகாப்புடன் பாக். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு
பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகாலம் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி செய்து பதவிக் காலத்தை நிறைவு செய்திருக்கிறது. அந்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசு 5 ஆண்டுகாலம் பதவி வகித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது.
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக், இம்ரான்கானின் தெக்ரிக்-இ- இன்சாப் ஆகிய 3 கட்சி கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 342 தொகுதிகளுக்கான இத்தேர்தலில் 4670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. மொத்தம் 107 வேட்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் இருந்தனர். மேலும் தேர்தலில் எவரும் வாக்களிக்கக் கூடாது என்றும் தலிபான்கள் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கையையும் மீறி இன்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தலிபான்களின் அச்சுறுத்தலால் பல இடங்களில் வாக்குப் பதிவு தொடக்கத்தில் மந்தமாக இருந்தது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 6 லட்சம் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடுமையான சோதனைக்கு பிறகே வாக்கு சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.