ஜனதா பரிவாரில் அரசியல் பயணம் தொடங்கி காங்கிரஸ் முதல்வரான சித்தராமையா
பெங்களூர்: கால் நூற்றாண்டுகாலமாக காங்கிரஸின் பரமவைரியாக கர்நாடகாவில் வலம் வந்த அதே சித்தராமையாதான் இன்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியின் 'முதல்வர்' என்பது விசித்திரமான வரலாறு....
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்தவர்கள் ஹனுமந்தையா, நிஜலிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், வீரப்ப மொய்லி, பங்காரப்பா போன்ற ஜாம்பவனாகள்...ஆனால் இன்று அதே காங்கிரஸ் கட்சி தமது முதல்வராக 7 வருஷத்துக்கு முன்புதான் கட்சியில் இணைந்த சித்தராமையாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறது.. இதில் விசித்திரமே 7 வருஷத்துக்கு முன்பு வரை காங்கிரசை காய்ச்சி எடுத்தவரும் சித்தராமையாதான்..
'ஜனதா' பாரம்பரியத்தைச் சேர்ந்த சித்தராமையாவை 'ஜனங்களின் முதல்வராக' ஏற்றுக் கொண்டு அரியாசனம் ஏற்றி வைத்திருக்கிறது காங்கிரஸ் ... சரி சித்தராமையாவின் அரசியல் பயணத்தைப் பார்ப்போம்...

பாரதிய லோக் தள்
1978ல் பாரதிய லோக் தள் அமைப்பில் இணந்தார். 1983ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு அனைவரும் எதிர்பாராத வகையில் வெற்றியும் பெற்று சட்டசபைக்குள் நுழைந்தவர் சித்தராமையா..

ஜனதா கட்சியில் ஐக்கியம்
அதன் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தார் சித்தராமையா.. அப்போது கன்னட மொழியை ஆட்சி மொழியாக்குவதை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் தலைவரானார்.

அமைச்சர் பதவி
1985ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் சித்தராமையா... அப்போது ராமகிருஷ்ண ஹெக்டேவின் அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சரானார். பின்னர் போக்குவரத்து அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டவர்
1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராஜசேகரமூர்த்தியிடம் தோற்றவர் சித்தராமையா...

ஜனதா தளம்....தேவகவுடா
1992ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1994ஆம் ஆண்டு தேவ கவுடா தலைமையிலான ஜனதா தள அரசில் நிதி அமைச்சராக இருந்தார் சித்தராமையா..

துணை முதல்வர்
1996ஆம் ஆண்டு ஜே.ஹெச். படேல் முதல்வராக இருந்த போது துணை முதல்வரானார் சித்தராமையா...அப்போது ஜனதா தளம் உடைந்தது. இதனால் கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார். அந்த கட்சியின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1999ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார் சித்தராமையா..

மீண்டும் து.மு.
2004ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தது. தரம்சிங் முதல்வராகவும் சித்தராமையா மீண்டும் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு தேவ கவுடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட ஜனத தளத்தை விட்டு வெளியேறினார்.

காங்கிரஸில் ஐக்கியம்
பின்னர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். 2006 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 257 வாக்குகளில் அடித்துப் பிடித்து வெற்றி பெற்றார். 2008 தேர்தலில் 5வது முறையாக எம்.எல்.ஏவானார். தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்று எட்டாக் கனவாக இருந்த முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார். இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார். கால் நூற்றாண்டுகாலமாக காங்கிரசையே எதிர்த்து அரசியல் செய்த சித்தராமையாவை முதல்வராக்கி அழகு பார்த்திருக்கிறது காங்கிரஸ்! சரித்திரம்தான்!!












Click it and Unblock the Notifications