காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்க சிறப்பு பயிற்சி
காரைக்கால்: காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அசோக்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது,
குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் பல்வேறு தகவல்களையும், நுணுக்கங்களையும் அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில் இது போன்ற சிறப்பு பயிற்சி முகாம் மிகவும் அவசியமானது.
குழந்தைகளை ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிப்பது அவசியம். குறிப்பாக, இன்றைய காலக் கட்டத்தில் ஆண் குழந்தைகள் தவறான பாதையில் செல்லும் நிலை உள்ளது. அதை நாம் தடுப்பது மிக அவசியம்.
இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ளும் தகவல்களை பிற அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, பொது மக்களும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தகவல்களை அவசியம் தாமே முன் வந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி, திட்டத்துறை துணை இயக்குனர் சாந்தா வில்லியம்ஸ், குழந்தைகள் நல குழுமத்தின் பொறுப்பளர் மணிவண்ணன், சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல தமிழகத்திலும் அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகின்றது.












Click it and Unblock the Notifications