விரைவில், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம்: ப. சிதம்பரம்
லண்டன்: மத்திய அரசு சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் என்று அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் கபில் சிபல், வி. நாராயண சாமி மற்று சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்ததாவது, ‘சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு, விரைந்து பரிசீலித்து சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும். ஆனாலும், சிபிஐக்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்று வேண்டும். அந்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் கீழ் செயல்படும். அதாவது, சிபிஐயின் விசாரணையில் எந்த ஒரு அமைப்பும் தலையிட முடியாத வகையில் தன்னாட்சி அதிகாரம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது' என கூறினார்.












Click it and Unblock the Notifications