மன்மோகன் சிங் திறமையானவர், அவரை மாற்றும் எண்ணம் துளியும் இல்லை: காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

நிலக்கரி சுரங்க ஊழல், ரயில்வே முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனராம். எனவே, குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மாற்றப்படுவார் என்றும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது போன்ற எண்ணம் காங்கிரஸுக்கு இல்லை என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது, "பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம். திறமையான பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். தலைமை பொறுப்பு பற்றிய கேள்வி எங்களிடம் இல்லை. அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை.
"உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது பற்றி ஒருமனதாக முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் தயார் என்றால், விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்றார்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், அடுத்த பிரதமராக மன்மோகன் சிங் தான் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதை குறித்து தெரிவிக்க சாக்கோ மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications