வேலைக்கு போகும் தகுதியுள்ள கணவன் மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது: ஹைகோர்ட்
சென்னை: வேலைக்கு செல்லும் தகுதி உள்ள ஆண்மகன் மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ராகேஷுக்கும் (32), அம்பிகாவுக்கும் (29)(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக இருந்த ராகேஷ் ரூ.17,000 சம்பளமும், சாப்ட்வேர் என்ஜினியரான அம்பிகா ரூ.30,000 சம்பளமும் வாங்கினர்.
திருமணம் முடிந்த சில நாட்களில் ராகேஷ் தனக்கு வேலைக்கு செல்ல விருப்பமில்லை என்றும், சொந்தமாக தொழில் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலையை விட்ட அவர் தொழில் எதுவும் துவங்காமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். குடித்துவிட்டு வந்து அவர் அம்பிகாவை கொடுமைப்படுத்தியுள்ளார். அம்பிகாவிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டார்.
இதையடுத்து அம்பிகா விவாகரத்து கோரி ராசிபுரம் துணை நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ராகேஷ் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் வருமானம் இன்றி உள்ளேன். என் மனைவி அம்பிகா பெருந்தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். அவரது வருமானத்தை நம்பி உள்ளேன். எனவே எனக்கு மாதம் ரூ.5,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்கவும், விவாகரத்து வழக்கை நடத்த ரூ.20,000 வழங்கவும் என் மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அதை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த அவர்கள் இன்று பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
உழைத்து, சம்பாத்தியம் செய்து மனைவி, மக்களை காப்பாற்றுவது என்பது ஒரு ஆண் மகனின் கடமையாகும். அதேநேரம், தம்பதியர்களில் ஒருவர் ஊனம் உள்ளிட்ட காரணத்தினால், வருமானம் இல்லாமல் இருக்கும்போது, அவர்களில் ஒருவர் வருமானம் பெறும்போது, அவரிடம் இருந்து மற்றவர் ஜீவனாம்சம் பெற இந்து திருமண சட்டத்தில் வழிவகை உள்ளது.
அதேநேரம் ஒரு வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கணவர் வேலைக்கு செல்ல தகுதி இருந்தும் வேண்டுமென்றே வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் ராகேஷுக்கு 32 வயது தான் ஆகிறது. அவர் வறுமையிலோ, ஊனமுற்றோ இருக்கவில்லை. அவர் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்யும் நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். எனவே இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனுதாரர் ராகேஷ் தாக்கல் செய்த மனுவை கீழ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது சரிதான். இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications