யாசின் மாலிக் பேச்சுக்கு பாஜக பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
சென்னை: பிரிவினைவாதம் பேசும் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்று பாஜகவின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சினையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் முற்றிலும் வேறுபட்டவை காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்பு மாநில தகுதியை அளித்துள்ளது. ஆனால், இலங்கை தமிழர்களே இழந்துவிட்ட தங்களது உரிமைகளை மீட்டதற்காக போராடி வருகின்றனர். அதற்காக இந்திய அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் மரக்காணத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்கள் நுழைவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக்கைப் போன்ற பிரிவினைவாதியை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஞானதேசிகன் எச்சரிக்கை
இதேபோல் இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் தண்டிக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, திருமண மண்டபத்தில் கருத்தரங்கமாக நடத்தப்பட்டது.அதில், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தியாவின் இறையாண்மையக்கு எதிராக செயல்படும் யாசின் மாலிக் கடலூருக்கு வந்தது எப்படி? அவரை அங்கு அழைத்து வந்தவர்களுக்கு என்ன சம்பந்தம் என்றும் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக பேசுவதாகக் கூறிக்கொண்டு, தமிழகத்தின் அமைதியை கெடுக்க விரும்புவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றும் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications