கெளரவத்திற்காக... காதல் மணம் புரிந்த தங்கை, மாமனாரை கொடூரமாகக் கொன்ற அண்ணன்!
நாகர்கோவில்: வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்தவரை மணம் புரிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த தங்கையை மிகக் கொடூரமாகக் கொன்று விட்டார் அவரின் உடன் பிறந்த அண்ணன்.தங்கையின் கணவர், மாமனார் ஆகியோரையும் வெறித்தனமாக வெட்டியதில் மாமனார் உயிரிழந்தார். கணவரின் உயிர் ஊசலாடி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியுள்ளது இந்த இரட்டைக் கொலை. நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 55 வயதான ஜெயராம். இவருடைய மகன் 21 வயதான சிவா. பட்டம் படித்துள்ளார். ஒரு முறை இவர் மொபைல் போனில் நண்பருக்குப் போட்டபோது அது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த செளமியா என்ற பெணணுக்குப் போய் விட்டது.அது பின்னர் நட்பாக மாறி, காதலாக மலர்ந்தது.
பின்னர் தொடர்ந்து இருவரும் போனில் பேசி காதல் வளர்த்தனர். 2 ஆண்டுகளாக இது நீடித்தது. இருவரது காதலும் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. செளமியாவின் குடும்பத்தார் உடனடியாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
இதனால் செளமியா வீட்டைவிட்டுவெளியேறி நாகர்கோவில் வந்தார். அங்கு சிவாவைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். இதையடுத்து சிவாவும், செளமியாவும் கிருஷ்ணன் கோவில் சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வடசேரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பின்னர் செளமியாவின் குடும்பத்தாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். செளமியாவை தங்களுடன் வந்து விடுமாறு அவரது அண்ணன் காலில் விழுந்து கேட்டார். ஆனால் செளமியா மறுத்து விட்டார். சிவாவுடன்தான் வாழ்வேன் என்று கூறி விட்டார்.
செளமியாவும், சிவாவும் மேஜர் என்பதால் இருவரையும் போலீஸார் அனுப்பி வைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் சந்தோஷமாக குடித்தனத்தைத் தொடங்கினர். சிவா, செளமியாவுடன், சிவாவின் தந்தை ஜெயராமும் தங்கியிருந்தார். ஜெயராமின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று செளமியாவின் இன்னொரு அண்ணன் சபரி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் காரில் செளமியா வீட்டுக்கு வந்தனர். அண்ணனக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார் செளமியா. பின்னர் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு கறி எடுத்து சமைத்து ஆசை ஆசையாக சாப்பாடு பரிமாறினார் செளமியா.
சாப்பிட்டு முடிந்ததும் காரில் ஏறி சபரியும், நண்பர்களும் வெளியே போனார்கள். பின்னர் மாலையில் திரும்பி வந்தனர். வந்தவர்கள் சிறிது நேரத்தில் செளமியாவையும், கணவர் சிவாவையும், மாமனார் ஜெயராமையும் சரமாரியாக கத்தியால் கழுத்தை அறுத்தும், வயிற்றைக் கிழித்தும் கொடூமாரக தாக்கத் தொடங்கினர்.
3 பேரும் இதில் சிக்கி படுகாயமடைந்தனர். சிவா ரத்தம் கொட்டக் கொட்ட வெளியே ஓடி வந்து விழுந்தார். அதேபோல ஜெயராமும் குடல் வெளியே வந்த நிலையில் ஓடி வந்து விழுந்தார். இதைப் பார்த்து அந்தப்பகுதியே பரபரப்பானது. சபரி உள்ளிட்ட 3 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி காரில் ஏறிப் பறந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, செளமியா ரத்த வெள்ளத்தில் கொடூரமாக இறந்து கிடந்தார். ஜெயராம், சிவாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயராம் உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசையாக சாப்பாடு போட்டு உபசரித்த தங்கையை காதலித்து கல்யாணம் செய்தாள் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக தீர்த்துக் கட்டிய அண்ணன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications