லோக்சபா தேர்தலில் மதிமுக போட்டி.. முதல் தொகுதியை அறிவித்தார் வைகோ!

விருதுநகரில் நடந்த மதி்முக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில், இரவு, பகல் என சுழன்று வருவதும், இன்பம், துன்பம் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருவதும் தான் வாழ்க்கை. அனுமன், சொல்லின் செல்வன், வாயுபுத்திரன். அனுமன் பெயரில் உள்ள இந்த திருமண அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அனுமான் எப்போதுமே நல்ல செய்திகளை சொல்பவன். அதே போன்று இங்கு கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதி சீட்டுகளை வாங்கிச் செல்லும் நிர்வாகிகளும் நல்ல செய்திகளை சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இயக்கம் மதிமுகதான். அணு உலை, ஸ்டெர்லைட், பூரண மதுவிலக்கு ஆகிய போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகரில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று நாம் நடத்திய உண்ணாவிரத போராட்ட தாக்கத்தினால்தான் மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது.
தமிழக அரசு டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற மாவட்டங்களிலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தது.
சுமார் 1400 கிலோ மீட்டர் கடந்து சென்று மத்திய பிரதேசத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் நடத்திய போராட்டத்தால்தான் பிரதமர் மன்மோகன்சிங்- ராஜபக்சே சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டும். ஆனால் வரும் அக்டோபருக்குப் பின் எந்த நேரமும் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட நிதி அவசியம். விருதுநகர் தொகுதியில் மதிமுக நிச்சயம் போட்டியிடும். கட்சி வளர்ச்சிக்கும், தேர்தல் செலவுக்கும் நிதி அவசியம்.












Click it and Unblock the Notifications