பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை: ஐகேட் தலைவர் பானேஷ் மூர்த்தி நீக்கம்

பானேஷ் மூர்த்தி இவ்வாறு செக்ஸ் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க விற்பனைப் பிரிவின் தலைவராக இருந்த இவர் மீது அவரது செயலாளராக இருந்த ரேகா மேக்சிமோவிச் என்ற பெண் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு கூறியதையடுத்து மூர்த்தியை ராஜினாமா செய்ய வைத்தது இன்போசிஸ். இது நடந்தது 2002ம் ஆண்டு. இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய ரேகாவுக்கு 3 மில்லியன் டாலர்களைத் தந்து பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்தது இன்போசிஸ்.
இதையடுத்து பெங்களூரில் தானே ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினார் மூர்த்தி. அதை பின்னர் ஐகேட் நிறுவனம் வாங்கியதோடு அவரையே தலைவராக்கியது.
இந் நிலையில் தான் பானேஷ் மூர்த்தி மீது இப்போது மீண்டும் செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
தனக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறான தொடர்பு வைத்திருந்தது மற்றும் அந்த ஊழியருக்கு செக்ஸ் தொந்தரவு தந்ததாக வந்த புகார்களையடுத்து விசாரணை நடத்திய ஐகேட் நிறுவனம், அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்துள்ளது.
மூர்த்திக்குப் பதிலாக ஜெரார்ட் வாட்சிங்கர் அந்த நிறுவனத்தின் இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது இன்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான மேக்அபீ நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக உள்ளார்.
பானேஷ் மூர்த்தி மறுப்பு:
இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மூர்த்தி மறுத்துள்ளார். நான் யாருக்கும் பாலியல் தொந்தரவு தரவில்லை. என்னிடம் பணம் பிடுங்க முயற்சி நடக்கிறது. 2002ம் ஆண்டில் என் மீது புகார் கூறிய பெண்ணுக்காக ஆஜரான அதே வழக்கறிஞர் தான் இப்போதும் இந்தப் பெண் சார்பிலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளார்.
அதே நேரத்தில் குறிப்பிட்ட அந்த பெண் ஊழியருடனான எனது தொடர்பு குறித்து நிர்வாகத்திடம் நானே கூறி்யிருக்கிறேன் என்றார் மூர்த்தி.
பானேஷ் மூர்த்தி மீது இந்த முறை புகார் கூறியுள்ள பெண்ணின் பெயர் அரசெலி ராய்ஸ் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications