ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு?

பல ஆண்டுகளாக ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா குடுபத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
இதனால் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவும், அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, அண்மைக் காலமாக சோனியாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அதனால், முன்பு போல டெல்லியில் இருந்து ரேபரேலிக்கு அவரால் செல்வதற்கு இயலவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரேபரேலியில் கட்சி வளர்ச்சி, தொகுதிப் பணி ஆகியவற்றை சோனியாவின் மகள் பிரியங்கா வதேரா கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பிரியங்காவை ரேபரேலியில் நிறுத்துவதற்கு காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக என்.டி.திவாரி பிரசாரம் செய்தார். இது காங்கிரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
இதை உணர்ந்த சோனியா சமீபத்தில் என்.டி.திவாரியை அழைத்து பேசினார். அவரிடம் பிரியங்காவுக்கு ஆதரவு கொடுக்க சோனியா கேட்டுக் கொண்டார். இதனால் பிரியங்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய திவாரி சம்மதித்து இருப்பதாக தெரிகிறது.
தற்போது பிரியங்காவிற்கு உதவியாக பிகார் மாநில காங்கிரஸில் தீவிரமாகப் பணியாற்றிவரும் பிரீதி கரேயிடம் ரேபரேலி தொகுதிப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள், பிரியங்காவை ரேபரேலி தொகுதியில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளே என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications