ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி. அவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை இறுதிப் போட்டி உள்பட எஞ்சிய 4 ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சவ்கான், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் ஐபிஎல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 வாரங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில்,
நீதிபதிகள் கூட கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து, ஸ்பாட் பிக்ஸிங்கால் அதிர்ச்சி அடைந்தனர். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் ஆட்டம் அது அப்படியே இருக்கும்படி செய்ய வேண்டும். மேலும் விளையாட்டின் நன்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
இந்நிலையில் தற்போது ஒவ்வொரு அணியுடன் ஒரு ஊழல் தடுப்பு பிரிவு இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் ஸ்ரீசாந்த்:
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததால் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அந்த 3 பேரும் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவர்களின் காவலை நீட்டிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 தரகர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்களின் காவலையும் நீட்டிக்குமாறு போலீசார் கேட்கவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications