தமிழகத்திற்கு கொடுக்க காவிரியில் நீரே இல்லை என்பதா? கர்நாடக காங். தலைவருக்கு திருமா கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப் போவதாக கர்நாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
"கடந்த பாஜக அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் திறந்து விடுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது தவறு. அது காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்குக் காரணமாகி விட்டது'' என குற்றம்சாட்டியிருக்கும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தமிழ் நாட்டுக்குக் கொடுப்பதற்குக் காவிரியில் தண்ணீர் இல்லை' எனவும் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் தமிழகத்துக்கு உரிய நீரைத் தரமாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே கர்நாடக காங்கிரஸ் தலைவர் இப்படிப் பேசியுள்ளார்.
மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டைத்தான் எடுக்கும். கடந்த கால நடைமுறைகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரி மேலாண்மை வாரியத்தையோ, காவிரி கண்காணிப்புக் குழுவையோ இதுவரை மத்திய அரசு அமைக்கவில்லை.
தேர்தல் லாபத்துக்காக மத்திய காங்கிரஸ் அரசு இப்படித் தமிழக மக்களின் உரிமையைப் பலிகொடுப்பது சரி தானா? என்பதைத் தமிழ் நாட்டிலிருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவின் பேச்சை அவர்கள் கண்டிப்பதோடு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும் படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்துத் தமிழகத்துக்கு உரிமையான தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத்துகிறோம். காவிரி ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது பாராட்டத்தக்கது தான் என்றாலும் காவிரியில் தண்ணீர் வருவதற்கு அதுமட்டுமே போதுமானதல்ல.
உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டும் இதைத் தீர்த்துவிட முடியாது என்பதைத் தமிழக அரசு புரிந்து கொண்டு தமிழக மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications