ஸ்பாட் பிக்சிங்: கோவையில் 3 பேர் கைது, திருப்பூர் புக்கீ தலைமறைவு

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி புரோக்கர் நர்கித்லக்கி உட்பட 6 பேரை கடந்த 17ம் தேதி கைது செய்தனர். நேற்று முக்கிய புரோக்கர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே நர்கித்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவையைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவையில் பொன்னையராஜபுரம் ராஜம்மாள் லே அவுட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் முகாமிட்டு இருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமண்(56), சாயிபாபா காலனியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், உக்கடத்தை சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் அக்பர்(51) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், ஒரு லேப்டாப், 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவது நெட்ஒர்க்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து 500 சப் புரோக்கர்களுடன் செயல்பட்டு, பல கோடி ரூபாய் பணம் சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்ட வழக்கில் கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த மேலும் இருவரை ஞாயிறன்று போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20 பேர் தலைமறைவு
இக்கும்பலுக்கு தலைவனாக உள்ள லட்சுமணன், மும்பையில் உள்ள இரு முக்கிய புள்ளிகள், சென்னை, பெங்களூரில் உள்ள புக்கிகளுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தெப்பக்குள வீதியை சேர்ந்த மேகராஜ், ஒப்பணக்காரவீதியை சேர்ந்த பிரதீப், காரமடையை சேர்ந்த சண்முகம், திருப்பூரை சேர்ந்த பனியன் அதிபர் துரை உள்ளிட்ட 20 பேர் பெங்களூரில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் பல புரோக்கர்கள்
இவர்களைத் தவிர, கோவையில் மேலும் ஒரு புரோக்கர் கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரூ.1 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் கோவையை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் உட்பட 5 முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தோண்டத் தோண்ட பூதம் போல பலர் கிளம்புவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications