நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் டாக்டர் பலி
நெல்லை: நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் மருத்துவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தைச் சேர்ந்த மருத்துவர் நகுலவேந்தனின் மனைவி ராஜசுபா(36). பல் மருத்துவர். அவர்கள் சுத்தமல்லி விலக்கில் தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். அவர்களின் மகன்கள் யுகாபரமமுத்து (6), கனியர் (4). ராஜசுபா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நகுலவேந்தன் சுபாவை அவரது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுபா சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை தேறியதால் மீண்டும் நெல்லைக்கு வந்தார். நெல்லைக்கு வந்த பிறகு சுபா சோர்வாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீர் என்று மரணம் அடைந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது என்றும், இதையடுத்து அவரது ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் குறைந்ததால் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications