மதுரையில் அனுமதி பெறாத அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை
மதுரை: மதுரையில் உள்ளூர் திட்டக் குழும அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரண்டு அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்டக்குழுவிற்கு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார். ஆட்சியரின் நடவடிக்கையின் பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
காதர் முத்து என்பவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள சம்பக்குளத்தில் தரைத் தளத்துடன் கூடிய மூன்று அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டியுள்ளார். இந்தக் கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து உள்ளூர் திட்டக் குழு அதிகாரிகள் விளக்கம் கேட்ட போது, முந்தைய மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி வழங்கிய வரைபட அனுமதியைக் காதர் காண்பித்தார். இது முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதி என்பதால் , இந்த அனுமதி செல்லாது என்று கூறி இன்று அந்த கட்டடத்துக்கு சீல் வைத்தனர்.
மேலும், எல்ஐசி பகுதியில் உள்ள YWCAவுக்கு சொந்தமான தரைத்தளத்துடன் கூடிய ஐந்து அடுக்கு வணிக வளாகம், மொத்த 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்துக்கும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறி உள்ளூர் திட்டக் குழு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் அனுமதி இன்றி அடுக்குமாடி கட்டடம் கட்டியர்வர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில் மேலும் பல கட்டடங்களுக்கும் அடுத்தடுத்து சீல் வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications