Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாசின் மாலிக்கை அழைத்ததில் என்ன தவறு?- சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? பிரதமர்களும் அரசு அதிகாரிகளும் அழைத்துப் பேச்சு நடத்தும் யாசின் மாலிக் தமிழகத்துக்கு வரக்கூடாதா.. இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள்அரங்குக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.

காஷ்மீர் சகோதரன்

காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டைபோல காஷ்மீரும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்?

அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா?

இனப்படுகொலைகாரன் ராஜபக்சே வருவது இந்தியாவுக்கு பெருமையா?

இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்? ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா?

கடந்த 35 ஆண்டுகளாக கச்சத்தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?

இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய ராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்?

ராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பக்தர்களின் பதில் என்ன?

காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+