கொளுத்தும் வெப்பம்… பாபநாசம் அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
நெல்லை: அக்னி வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பாபநாசம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பயணிகள் வருகையால் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி களைகட்டியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் முண்டந்துறை புலிகள் காப்பாக பகுதியில் உள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்று. களக்காடு மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை காலங்களில் மட்டும்தான் தண்ணீர் கொட்டும். ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கொட்டும். இந்த அருவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் கோடை வெயில் கடுமையாக அடித்து வருவதாலும், கோடை விடுமுறை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க உள்ளதாலும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிய தொடங்கியுள்ளனர். அடிப்படை வசதிகள் தேவை
இந்த அருவி வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் அடிப்படை வசதிகள் அறவே இல்லை. அருவிக்கு அரசு சார்பில் பஸ் வசதிகளும் கிடையாது. வாடகை டாக்சி, சொந்த வாகனங்களிலேயே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே அரசு பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாகும்.
புலிகள் காப்பகம் மூடல்
இதனிடையே வறட்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள களக்காடு புலிகள் காப்பகம் நேற்று மூடப்பட்டது. இங்கு தலையணை, தேங்காய் உருளி சிற்றருவி, முதலிருப்பான், செங்கல்தேரி உள்ளிட்ட இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன. தலையணையில் ஓடும் பச்சையாற்றில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அருவி மற்றும் நீரோடைகளின் தண்ணீர் வரத்து குறைந்தது. தண்ணீர் இன்றி தலையணை தற்போது வறண்டு காணப்படுகிறது. தடுப்பணை அருவியிலும் தண்ணீர் விழவில்லை. ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வனவிலங்குகளுக்கு குடிநீராக பயன்பட்டு வருகிறது.
வறட்சியினால் காட்டுத் தீ விபத்தை தடுக்க வனப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் புலிகள் காப்பகம் மூடப்பட்டது. தலையணை நுழைவாயில் கேட் அடைக்கப்பட்டது. மேலும் முதலிருப்பான் சோதனை சாவடிகளும் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications