பிரபல கடத்தல் மன்னன் வளத்திக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம்: சேலம் நகரை கலக்கிய பிரபல ரவுடி வளத்தி குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்துபோட வந்தவர்களை சிலர் வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் பெண் உள்பட 6 பேருக்கு சரமாரி வெட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை பொதுமக்களும், போலீசாரும் தூக்கி சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்பகுதியில் பெரும் பரபரைப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வளத்திக்குமார் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வளத்திகுமார், முதலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டான்.
வளத்திகுமார் மீது ஏற்கனவே அரிசி கடத்தல், ஆள் கடத்தல், கொலை முயற்சி , கொலை என மொத்தம் வழக்குகள் 27 உள்ளன. வளத்திகுமாரால் தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய துணை கமிஷனர் பாபு, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலிக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சேலம் கமிஷ்னர் அனுமதி அளித்ததையடுத்து வளத்திக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
கோவை மத்திய சிறைக்கு இந்த உத்தரவை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் இன்று காலை எடுத்து சென்றனர். இதையடுத்து ரவுடி வளத்திக்குமார் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். வளத்திகுமார் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதால் சேலம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.












Click it and Unblock the Notifications