’லகுலிஷ்’ இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் : குஜராத்தில் தொடக்கம்
அகமதாபாத்: இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகமான, ‘லகுலிஷ்' நேற்று குஜராத் முதலமைச்சர் மோடி தலைமையில் அகமதாபாத் அருகே தொடங்கப் பட்டது.
நான்காவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, யோகாசன பிரியர். தினமும் தான் யோகா பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், தான் சந்திக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் யோகா பயிற்சியை பரிந்துரை செய்பவர் மோடி.
அந்தளவு யோகா மீது தீரா காதல் கொண்ட மோடி குஜராத்தில் யோகா பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அனுமதி வழங்கினார். அதன்பேரில், அகமதாபாத் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சர்கேஜ்-காந்திநகர் சாலையில் புதிய யோகா பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
'லகுலிஷ்' யோகா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்ட அதை நேற்று மோடி திறந்து வைத்தார். தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த பல்கலைக்கழக கட்டிடம். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ஐ.கே.ஜடேஜாவுக்கு சொந்தமான டிரஸ்ட் இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
'லகுலிஷ்' பல்கலைக்கழகத்தில் யோகா 3 ஆண்டு பட்டப்படிப்பு ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் வழங்கப்பட இருக்கிறது. பல குறுகிய கால வகுப்புகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தை திறந்து வைத்த மோடி, பின்னர் விழாவில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'சிறிது காலத்துக்கு முன், இந்த நவீன காலத்தில் யோகாவைக் குறித்து பேசுவது வீண் வேலை என்று கருதப்பட்டது. ஆனால் இன்று, இந்தியா மட்டுமல்ல, உலகமே யோகாவின் சக்தியை உணர்ந்துள்ளது. ', என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications