தடையை மீறி மரக்காணம் சென்ற மேதாபட்கர் ஆறுதல்… போலீஸ் திணறல்…
மரக்காணம்: மரக்காணம் கலவர பகுதியில் போலீஸ் தடையை மீறி சமூக சேவகர் மேதா பட்கர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை தடுக்க முடியாமல் போலீஸ் திணறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த மாதம் 25ம் தேதி இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கலவரத்தை தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் சமூக சேவகர் மேதா பட்கர் மரக்காணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட இன்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையில் ஏராளமான போலீசார் மரக்காணம் கட்டையன் தெருவில் குவிக்கப்பட்டனர்.
இன்று காலை 8.10 மணிக்கு மேதா பட்கர் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மரக்காணம் வந்தார். கட்டையன் தெருவிற்கு செல்ல முயன்றபோது இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், இப்பகுதியில் 144 தடை உத்தரவு உள்ளது என்று கூறி தடுத்தார். அதற்கு மேதா பட்கர், 144 தடை உத்தரவின்படி 4க்கும் மேற்பட்டோர்தான் செல்லக்கூடாது நாங்கள் 3 பேர் மட்டுமே செல்கிறோம் என்று கூறி தடையை மீறி கட்டையன் தெருவுக்கு சென்றார். பெண் காவலர்கள் யாரும் இல்லாததால் அவரை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
கட்டையன் தெருவுக்கு சென்ற மேதா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் அரசியல் கட்சியோ, தனிப்பட்ட இயக்கமோ கிடையாது. நான் சாதாரண இந்திய பிரஜையாக இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினேன். இன்று மாலை தமிழக தலைமை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து அவர் காரில் கல்பாக்கம் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக குடியிருப்புக்களை இழந்த மக்களை சந்தித்துப் பேசினார். வீடுகளை, நிலங்களை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் இது தொடர்பாக தமிழக உள்துறை செயலரை சந்தித்து வலியுறுத்தப் போவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications