பெண்களிடம் சில்மிஷம் செய்த போதை எஸ்ஐ ஆயுதபடைக்கு தூக்கியடிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூரில் நடந்த தேரோட்ட விழாவில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி.
கடையநல்லூர் மார்க்கெட் பகுதி முப்புடாதி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவில் தேர் வலம் வந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடையநல்லூர் சிறப்பு எஸ்ஐ ஒருவர் போதையில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்தவர்கள் அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் அங்கிருந்து வேறொரு பகுதிக்கு சென்ற அவர் அங்கும் பெண்களிடம் சில்மிஷத்தை தொடர்ந்தார். இதை பார்த்த அங்குள்ள மக்கள் எச்சரித்ததோடு மட்டுமின்றி சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.
போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர் எஸ்பி விஜேயந்திர பிதாரியிடம் புகார் தெரிவித்தனர்.
கடையநல்லூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட எஸ்பி சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐயை நெல்லைக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதோடு அவரை பாளை ஆயுதபடைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications