என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை: இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்ற என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தனிச் சிறப்புமிக்க 'நவரத்னா' தகுதியைப் பெற்று உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மின் உற்பத்தியில் ஈடு இணையற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. பொன் விழா கண்ட என்.எல்.சி. நிறுவனம், தமிழ்நாட்டுக்கும், தென் மாநிலங்களுக்கும் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து அளிக்கிறது.
கடந்த நிதி ஆண்டில், 1,411 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி, நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துவரும் என்.எல்.சி. நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.
2002-ம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்து, அதைச் செயல்படுத்தும் கட்டத்திற்கு வந்தபோது, நான் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அன்றைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து, என்.எல்.சி. பங்குகளைத் தனியாரிடம் விற்கக்கூடாது; தமிழகத்தின் நிலத்தில் அவர்கள் வியர்வையில் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனத்தை எக்காரணத்தை முன்னிட்டும் தனியாருக்குத் தாரை வார்க்க வழிவகுக்கும் விபரீத முடிவை கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவாக, அந்த முடிவை பிரதமர் வாஜ்பாய் கைவிட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.
ஆனால், 2004 இல் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்று வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், ஒவ்வொன்றாகத் தனியார் நிறுவனங்களின் பிடியில் போய்க்கொண்டு இருக்கின்றன.
தமிழ்நாடு மின்பற்றாக் குறையால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றபோது, தமிழகத்திற்கு சுமார் 1,300 மெகாவாட் மின்சாரம் வழங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications