பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையாது: திருமாவளவன்

திமுக கூட்டணியில் இருந்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுகவால் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினராக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக முறித்துக் கொண்ட நிலையில் தொடர்ந்தும் திமுகவுடன் கை கோர்த்து இருக்கிறது விடுதலை சிறுத்தைகள். ஆனால் மரக்காணம் கலவரம் இந்த நிலையை மாற்றியிருக்கிறது.
மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து திமுக, பாமகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியோ அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறது. அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உடல்நிலையை விசாரிக்க திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் திமுக கூட்டணியில் பாமக இணைவதாக செய்திகள் அடிபடுகின்றனவே என்று கேட்டதற்கு "அடிபடுகின்றன" என்று சொல்லிவிட்டீர்களே என்று சூசகமாக பதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இணையாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பா.ம.க. இணைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ள அவர், பா.ம.க.வுடன் இணைந்து செயல்பட முடியாத நிலையை அக்கட்சி ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுல்லாமல் 2016 சட்டசபை தேர்தலிலும் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications