கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் புகார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 19.5.2013 அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவ, முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இது சம்பந்தமான செய்தி 26.5.2013 நாளிட்ட வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.
எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலைவெறி நோக்கத்தோடு காரல் மார்க்ஸ் பேசியுள்ளார். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திமுக பேச்சாளர் காரல் மார்க்ஸ் தொடர்புடைய பயங்கரவாத சக்திகளின் தொடர்பை தீர விசாரித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications