சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்கு பழிவாங்கவே மே 25 தாக்குதல்: மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்பு!
ராய்ப்பூர்: பழங்குடி மக்கள் மீதான சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மே 25-ந் தேதியன்று சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்.எல்.ஏ. உதய் முதியார் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 36 பேர் படுகாயமடைந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதான மாவோயிஸ்டுகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தண்டகாருண்யா செய்தித் தொடர்பாளர் குட்சா உசேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், சல்வா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கவே மே 25-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. சத்தீஸ்கரில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் சம அளவில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மகேந்திர கர்மா?
மாவோயிஸ்டுகளின் கோட்டையான தண்டேவடா பகுதியைச் சேர்ந்த மகேந்திர கர்மா, மாவோயிஸ்டுகளுக்கு வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சல்வா ஜூதும் என்ற ஆயுதப் படையை உருவாக்கினார். சல்வா ஜூதும், பழங்குடி மக்களை அவர்களது சொந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றியதுடன் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி படுகொலைகளை அரங்கேற்றியது. இதனால் 2010,2011, 2012 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்தும் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் உயிர் தப்பியவர் மகேந்திர கர்மா. இவர் உருவாக்கிய சல்வா ஜூதுமை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. மகேந்திர கர்மா உருவாக்கிய சல்மா ஜூதுமின் வன்முறைகளுக்குப் பழிவாங்கும் வகையில் மாவோயிஸ்டுகள் மகேந்திர கர்மாவின் உயிரை வேட்டையாடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications