அப்பாடா, இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிகிறது

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மக்களை வறுத்தெடுக்கும். இந்த ஆண்டு கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.
முதலில் 100 டிகிரியைத் தொட்ட வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து 108, 109 டிகிரியை எட்டியது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். வீட்டுக்குள்ளும் ஏசி இல்லாமல் இருக்க சிரமமாக இருந்தது.
கோடை மழையும் ஏமாற்றியதால் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான மகாசேன் புயலால் தமிழகத்தில் கன மழை பெய்து நிலம் குளிரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கூட திசையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டது.
கடந்த 25 நாட்களாக தமிழக மக்களை அவதிப்பட வைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டால் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும். இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications