தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்..பி.யாகப் போவது யார்? யார்?
சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா செல்லப் போகும் தமிழக எம்.பி.க்கள் யார்? என்ற பரபரப்பு அதிமுகவிலும் கனிமொழி எம்.பி.யாகிவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு திமுகவிலும் இருந்து வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுகவின் மைத்ரேயன், இளவரசன், காங்கிரசின் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
திமுகவில் கனிமொழியை எப்படியும் எம்.பி.யாக்கிவிடுவது என்பது அவரது தந்தை கருணாநிதியின் போராட்டமாக இருக்கிறது. ஒரு எம்.பி.யாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் திமுகவுக்கோ 23 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றன. இதனால் தேமுதிகவின் தயவை நாடிப் பார்த்தது திமுக. ஆனால் தேமுதிக சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் அழையா விருந்தாளியாக பாமக, காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என ஒவ்வொரு கட்சியின் தயவையும் கோரி வருகிறது. இதனால் கடுப்பாகிப் போன கனிமொழி தமது தந்தையிடம் பேசாமல் தாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் ஏற்கெனவே தூத்துக்குடி தொகுதியை இலக்கு வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அதிமுகவோ யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக தெளிவான முடிவில் இருக்கிறதாம். அத்துடன் திமுக வளைக்க நினைக்கும் புதிய தமிழகம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தையும் சமாதானம் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் சிறுதாவூர் பங்களாவில் முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிற மைத்ரேயன், குமார் பாண்டியன், ஜெனிஃபர் சந்திரன், ஆவடி குமார் ஆகியோர் பெயரை வைத்து பூஜை நடந்தது என்கிறது அதிமுக வட்டாரங்கள்...
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் அல்லது டி. ராஜா ஆகியோரில் ஒருவரும் அதிமுக தயவில் எம்.பி.யாக இருக்கின்றனர். தா. பாண்டியனுக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் டி.ராஜாவும் தம் பங்குக்கு லாபியில் ஈடுபட்டு வருகிறார். அதனால் டி.ராஜா மீண்டும் எம்.பி.யாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications