500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா!!
சென்னை: 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழை பாடமாகப் படிக்காததால் ரச்சனா என்ற மாணவி முதலிடத்தை இழந்தார்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களில் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அனுஷா, தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைப் போன்றே தமிழ், ஆங்கிலத்தில் 99-ம், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறும் எடுத்த எட்டு மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை தவிர்த்துவிட்டு, வேறு மொழிகளை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர்.
இத்தனைக்கும் இவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 பேரை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றவர்கள்.
புதுவையைச் சேர்ந்த ஹம்சிகா, பொன்னேரி வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரச்சனா ஆகிய மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரச்சனா சமஸ்கிருத்தை பாடமாக எடுத்துப் படித்தவர். அதில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஹம்சிகா ப்ரெஞ்சை மொழிப்பாடமாகப் படித்து 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால் தமிழை எடுத்துப் படிக்காததால் அவர்களால் முதலிட அந்தஸ்தைப் பெற முடியவில்லை.
எஸ்எஸ்எல்சியில் தமிழைப் பாடமாகப் படித்தால் மட்டுமே மாநில அளவில் முதலிட அந்தஸ்தைப் பெறும் போட்டியில் இடம்பெற முடியும். மாநில அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய குற்றாலம் மாணவி மாநிலத்தில் 2வது இடம்
நெல்லை மாவட்டம் பழைய குற்றாலாம் ஹில்டன் பள்ளியில் படித்த மாணவி ஸ்டெர்லின் பொன் ஜெபா மாநில அளவில் 2வது இடத்தையும், நெல்லை மாவட்ட அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர் பெற்ற மதிப்பெண் விவரம்-
தமிழ் -98, ஆங்கிலம் -99, கணிதம்-100, சமுக அறிவியல்-100, அறிவியல் -100, மொத்த மதிப்பெண் : 497












Click it and Unblock the Notifications