அதிக கட்டணம்.... தட்டிக்கேட்ட பெற்றோர்: பழிவாங்க... 28 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த பள்ளி
சென்னை: சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று அதிக கட்டணம் செலுத்த மறுத்த 28 மாணவர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் டவுட்டன் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் கூறி, 28 மாணவர்களின் பெற்றோர் கல்விக்கட்டணம் செலுத்த மறுத்தனராம். இதற்குப் பழிவாங்கும் விதமாக அம்மாணவர்களின் டிசியை கொரியரில் அனுப்பி அதிர்ச்சி அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.
தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் இச்சம்பவம் குறித்து கூறியதாவது, 'டவுட்டன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலித்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த பள்ளிக்கு உத்தரவிட்டுள்ளது. தங்களது குழந்தைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த சென்ற பெற்றோரிடம் கடந்த ஆண்டு நிலுவைத் தொகையையும் பள்ளி நிர்வாகம் கோரியுள் ளது. அவர்கள் பள்ளியின் தாளாளரை பார்க்க வேண்டும் என்றதும் உள்ளேயே அடைத்து விட்டனர்.
பெற்றோர்கள் 50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தது மட்டுமின்றி வக்கீல் நோட்டீசும் பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது. அதற்கு பதில் அளிப்பதற்குள் மாணவர்களின் மாற்று சான்றிதழ்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டி.சி. கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி எந்த குழந்தைக்கும் டி.சி.யை பள்ளிகள் தானாக வழங்கக்கூடாது. 28 மாணவர்களையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக கல்வித்துறை செயலாளரை சந்தித்து முறையிட உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜ் கூறும் போது, 'இந்த பள்ளி நிர்வாகம் 28 மாணவர்களுக்கு டி.சி. கொடுத்திருப்பது தொடர்பாக ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.
ஆனால் பள்ளியின் நிர்வாகத் தரப்பிலோ, இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த பெற்றோர் அந்த பள்ளிக்கு சென்ற போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். எனவே, தான் 28 மாணவர்களின் மாற்று சான்றிதழை பெற்றோருக்கு அனுப்பினோம்' என விளக்கமளிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications