கோவா பாஜக செயற்குழுக் கூட்டம்- 3வது நாளும் அத்வானி பங்கேற்பு இல்லை: பிரகாஷ் ஜவேத்கர்
பனாஜி: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலால் நாளையும் கோவாவில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் ஆகியவை நேற்று முதல் கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் ‘உடல்நலக்' குறைவு என்ற காரணத்தை முன்வைத்து கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் கோவா செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என்பதாலேயே அத்வானியும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்ததாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பனாஜியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர், மோடி போபியாவால் காங்கிரஸ் கட்சி மிரண்டு போயுள்ளது. இதனாலேயே மிக மோசமான ஆபாசமான அறிக்கைகளை அந்த கட்சி வெளியிட்டு வருகிறது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நாளை நரேந்திர மோடி சிறப்புரையாற்ற இருக்கிறார். இன்று மாலை 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியில் எந்த ஒரு கோஷ்டி பிரச்சனையும் இல்லை. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கமாட்டார். அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வு எடுத்து வருகிறார்.
100 நாளில் அரிசி விலையைக் குறைப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி பொய்யாகிப் போய்விட்டது. நிலக்கரி சுரங்க அனுமதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பின்னரும் கூட பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் நீடித்து வருகிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உதவியாளர் ஜார்ஜ் மீதான வழக்கை சிபிஐ கைவிட்டிருப்பதும் கூட சிபிஐ அமைப்பு எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications