லோக்சபா தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும் வெல்ல சபதம்-அதிமுக செயற்குழுவில் அதிரடி தீர்மானம்!!

தமிழகத்தில் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக செயற்குழு இன்று கூடியது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும் முதல்வரும் அக்கட்சிப் பொதுச்செயலருமான ஜெயலலிதா முன்னிலையிலும் இந்த செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு உயிர் நீத்தோருக்கும், காலமான திரைப்பட பிரபலங்கள் டி.எம். செளந்தரராஜன், பிபி.சீனிவாசன், சுகுமாரி மற்றும் தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது, அம்மா திட்டம், அண்ணா உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மசோதா விவகாரம், மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தும் இலங்கையைத் தட்டிக்கேட்காத விவகாரம், ஈழத் தமிழர் நலனுக்கு ஆதரவாக இல்லாத போக்கு, சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் பங்கு குறைப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து "கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசு" என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் ஏற்போம் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராஜ்யசபா தேர்தல்
இன்றைய செயற்குழுவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான ராஜ்யசபா தேர்தல் 27-ந் தேதி நடைபெறுகிறது. ஒரு ராஜ்ய சபா எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு தேவை. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு சபாநாயகர் உள்பட 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் இருந்து 4 பேர் எம்.பி.க்களாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த 4 வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல் 136 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு 4 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்த பிறகும், மீதம் 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆதரவு கட்சி எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தைக் கொடுக்க அதிமுக தலைமை விரும்பியது. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியனை எம்.பியாக நிறுத்தவும் அதிமுக விருப்பம் தெரிவித்தது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது. அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவைத்தான் மீண்டும் எம்.பி.யாக நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்பினர். இது தொடர்பாக ஜெயலலிதாவை நேற்றுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் இச்சந்திப்பு நடைபெறவில்லை. இதனால் 5வது வேட்பாளரையும் அதிமுகவே அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
மேலும் தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் தங்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஒரு எம்.பி.யைக் கூட உருவாக்கும் நிலையில் இல்லை. ஒரு வேளை எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாத நிலையில் 6வது வேட்பாளரையும் அதிமுகவே நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டது. அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் ராஜ்யசபா தேர்தல் பற்றி எதுவும் அறிவிக்கப்படாத போதும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
நாளை வேட்பாளர் பட்டியல்?
இருப்பினும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் தொடங்க இருப்பதால் நாளை அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications