திட்டக்குடிக்கு பதில் ராமநத்தத்தில் தேமுதிக கண்டன பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி
கடலூர்: தேமுதிக பொதுக் கூட்டம் அவர்கள் விரும்பியவாறு திட்டக்குடியில் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் ராமநத்தத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகர தேமுதிக சார்பில் மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து திட்டக்குடியில் இன்று மாலை கண்டன பொதுக் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் திட்டக்குடியில் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி. ராதிகாவை சந்தித்து பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்டனர். ஆனால் அவரும் அனுமதி அளிக்க மறுத்தார். பின்னர் கூட்டத்தை அருகில் உள்ள ஊரான ராமநத்தத்தில் நடத்த தேமுதிகவினர் அனுமதி கேட்டனர். அங்கு கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
எனவே கண்டன பொதுக் கூட்டம் திட்டமிட்டபடி இன்று மாலை நடக்கும். ஆனால் திட்டக்குடிக்கு பதிலாக ராமநத்தத்தில் நடக்கும். இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சபா சசிகுமார், மாவட்ட பொருளாளர் அணி செயலாளர் உமாநாத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.












Click it and Unblock the Notifications