6 மாசமாச்சும் பிரதமராக இருக்க விடுங்களேன்.. பாஜக தலைமையிடம் கோரிய அத்வானி!
டெல்லி: தன்னை 6 மாதம்வரை பிரதமராக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை அத்வானி பாஜக தலைமைக்கு விதித்ததாகவும், அதை பாஜக தலைமை ஏற்க மறுத்ததால்தான் கோபமடைந்து அவர் ராஜினாமா முடிவை அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
தனது கோரிக்கைகளை பாஜக தலைமை நிராகரித்ததால் விரக்தி அடைந்து அவர் ஒட்டுமொத்தமாக பாஜக பதவிகள் அனைத்தையும் துறக்க முன்வந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமையே தனது ராஜினாமா கடிதத்தை அத்வானி எழுதிவிட்டாராம். அதை கட்சித்தலைமைக்கும் தனது ஆதரவாளர்கள் மூலமாக தெரிவித்துள்ளார். ஆனால் கட்சித் தலைமை அதை நிராகரித்ததால் கோபமடைந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டாராம்.

3 நிபந்தனைகள்
பாஜக தலைமைக்கு மொத்தம் 3 நிபந்தனைகளை அத்வானி விதித்தாராம்.

நானே பிரதமர்
அதில் முக்கியமானது, தன்னை பிரதமர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்க வேண்டும் என்பது. இதை கட்சித் தலைமை நிராகரித்து விட்டதாம்.

6 மாதங்களுக்கு
மேலும் தன்னை குறைந்தது 6 மாதங்கள் வரை பிரதமராக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது அத்வானியின் கோரிக்கையாகும்.

மோடிக்கு பெரும் பதவி கூடாது
அத்வானி போட்ட 2வது நிபந்தனை என்னவென்றால் நரேந்திர மோடியை பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்காமல், ஒருங்கிணைப்பாளராக மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது.

எனக்குக் கீழ்தான் மோடி
3வது நிபந்தனையானது, மோடிக்கு என்னபதவி கொடுக்கப்பட்டாலும் அவர் தனக்குக் கீழ் பணியாற்ற வேண்டும் என்பதாகும். பிரசார உத்திகளை தானே வகுத்து, தனது தலைமையில் மோடி உள்ளிட்டோர் பணியாற்ற வேண்டும் என்பதே அத்வானியின் கோரிக்கையாகும்.

ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை
அத்வானி நிபந்தனை விதித்ததை ஆர்.எஸ்.எஸ். ரசிக்கவில்லையாம். எனவே இதை ஏற்க வேண்டாம் என பாஜக தலைமையை ஆர்.எஸ்.எஸ். தலைமை நெருக்கியதாம்.

மகனை விட்டு அத்வானியை சமாதனப்படுத்த முயன்ற சிங்
அத்வானியின் முடிவு குறித்து அறிந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தனது மகன் பங்கஜ் சிங்கை டெல்லியிலே இருந்து அத்வானியை சமாதானப்படுத்துமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் அத்வானி மாறவில்லையாம்.

கோவாவில் கடும் வாக்குவாதம்
மேலும் அத்வானி விவகாரம் தொடர்பாக கோவாவில் தேசிய செயற்குழு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாஜக கட்டு்பபாட்டு அறையில் தலைவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் மூண்டதாம். ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அனந்தகுமார், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கல ந்து கொண்டனராம். கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் போல கட்டுப்பாட்டு அறை காணப்பட்டதாக கூறுகிறார்கள்.

அடிதடி நடக்கவில்லை
ஆனால் தலைவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்தான் நடந்ததே தவிரஅடிதடி போன்ற காட்சிகள் இடம் பெறவில்லை என்று கூறுகிறார்கள்.

வாஜ்பாயி இருந்தபோதே
ஆனால் பிரதமர் ஆசை அத்வானிக்கு இப்போது வந்ததில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில்ஆட்சியைப் பிடித்தபோதே பிரதமர் பதவிக்கு முயன்றவர் அத்வானி. ஆனால் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் துணை பிரதமர் பதவிக்கு ஒத்துக் கொண்டார்.

கனவுடன் வாழ்ந்தவர்
மேலும் பிரதமர் பதவி கனவுடன் நீண்ட காலமாக இருந்து வந்தவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கனவை ஆர்.எஸ்.எஸ். தவிடுபொடியாக்கியதை தாங்க முடியாமல்தான் தற்போது பாஜக கட்சிப் பொறுப்புகளை உதறும் முடிவுக்கு அத்வானி வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications