எல்.கே.அத்வானியை முன்வைத்துதான் எத்தனை எத்தனை சர்ச்சைகள்..
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி தாம் வகித்து வந்த அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். இது அவரது ஆற்றாமையின் வெளிப்பாடுதான் அல்லது அவரது சகாப்தத்தின் முடிவு காலம் என்று தான் வர்ணிக்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையே சர்ச்சைக்குரியது என்று விமர்சிக்கப்பட்டாலும் அது தேர்தல் அரசியல் களத்துக்கு வந்த பின்னும் நீண்டகாலம் ‘தீண்டத்தகாத' கட்சியாகவே இருந்து வந்தது. ஆனால் 1990களுக்குப் பிந்தைய இந்தியாவின் கூட்டணி அரசியல் சகாப்தம் இதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. இந்த கூட்டணி சகாப்தத்தில் ஏறுமுகம் கண்ட எல்.கே.அத்வானி உருவாக்கிய சர்ச்சைகள் ஏராளம்...

ரத யாத்திரையும் பாபர் மசூதியும்
இந்திய வரலாற்றின் கறையாக படிந்துகிடப்பது அயோத்தி பாபர் மசூதி இடிப்பு. இந்த பாபர் மசூதி இடிப்புக்கு வித்திட்டது எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை என்கிறது வரலாறு. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அத்வானியும் முக்கிய குற்றவாளி

அன்று மோடிக்கு செம ஆதரவு
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் நிகழ்ந்த காலத்தில் கோவாவில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மோடி தலைமையிலான குஜராத் அரசை கலைக்க பாஜகவில் குரல் எழுந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் அத்வானி.

ஜின்னா மதச்சார்பற்றவர்
2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்த ஒரு கருத்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமான முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் என்று பாராட்டினார். இதனாலேயே அவர் தமது கட்சித் தலைவர் பதவியை துறக்க நேரிட்டது.

மோடிக்கு கடும் எதிர்ப்பு- பதவி ராஜினாமா
2009ஆம் ஆண்டு தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அத்வானியின் முகம் தோல்வி முகமாகிப் போனது. இதைத் தொடர்ந்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள குஜராத் முதல்வர் மோடியை லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக பாஜக அறிவித்தது. இதில் செம கடுப்பாகிப் போன அத்வானி தாம் வகித்து வந்த கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து இன்னொரு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறார். ஏற்கெனவே அத்வானி வீட்டு முன்பு மோடி ஆதரவாளர்கள் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications