டாக்டர் மீது ஆசிட் வீச்சு: சென்னையில் மர்ம கும்பல் அட்டகாசம்
சென்னை: சென்னையில் டாக்டர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியில் வசித்து வருபவர் அல்டாப் உசேன் (27). யுனானி டாக்டரான இவர் புதுப்பேட்டையில் கிளினிக் வைத்துள்ளார். நேற்று இரவு அல்டாப் உசேன் தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இரவு 10 மணிக்கு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வேப்பேரி அழகப்பா சாலையில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். அவர் சுதாரிக்கும் முன்பாக ஒருவர் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அல்டாப் உசேனின் முகத்தில் வீசினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரது முகம் கருகியது.
அருகில் இருந்தவர்கள் அல்டாப் உசேனை உடனடியாக ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் ஞானசேகரன் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அல்டாப் உசேன் மீது ஆசிட் வீசியவர்கள் யார்? எதற்காக இச்செயலில் ஈடுபட்டனர் என்பது மர்மமாக உள்ளது.
யுனானி சிகிச்சையால் பாதிக்கப்பட்ட யாரேனும் ஆசிட் வீசினார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் அல்டாப் உசேனிடமும், அவரது உறவினர்களிடமும் இது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி வருகிறார்கள்.
சென்னையில் இளம்பெண்கள் மீது ஆசிட் வீசப்பட்ட நிலையில் டாக்டர் ஒருவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications