மாணவர் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் வசூல்: நாமக்கல் பள்ளிகளில் ஐடி சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளியில்6ஆம் வகுப்பு முதல் 12 பிளஸ் வரை 10 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். கடந்த மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் அபினேஷ் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தார். மேலும் 2வது இடத்தையும் இந்த பள்ளி மாணவரே பிடித்தார்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு மாணவர்கள் அந்த பள்ளிக்கு படையெடுத்தனர். இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 3,600 மாணவர்கள் சேர்ந்தனர்.மாணவர் சேர்க்கையின் போது அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வசூலித்ததாக பள்ளி மீது புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
பள்ளியில் உள்ள ஆசிரியர், ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், காவேரிப்பட்டியில் உள்ள குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10,000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ் 2 வகுப்பில் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், கந்தபாளையத்தில் உள்ள எஸ்.கே.வி மெட்ரிக் பள்ளியிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரி்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் சேர்க்கைக்கு 3 லட்சம் வரை பணம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் இந்த பள்ளி மாநிலத்தில் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் முதலிடம், இரண்டாம் இடம் என ரேங்க் பெறுவதன் அடிப்படையில் பெற்றோர்கள் இந்த பள்ளிகளுக்கு படையெடுப்பதால் லட்சக்கணக்கில் டொனேசன் பெற்றுக் கொண்டு அட்மிசன் போடுகின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்.
இந்தப் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் பள்ளி நிர்வாகிகளிடையே தற்போது கிலி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications