தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு...எப்படியும் மீண்டு விடும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

அமெரிக்க டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.58.96 என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார துறையில் மேலும் சீர்திருத்தங்களை செய்யப்போகிறோம். அடுத்த சில நாட்களில், வாரங்களில் எண்ணற்ற முக்கிய முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஜூன் மாதத்தில் எத்தனையோ முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்படும். அவை பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும். நிலக்கரி, எரிவாயு விலை நிர்ணயம் செய்தல், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்தல், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீடு ஈர்ப்பது போன்றவற்றில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதைப் பார்த்து பதற்றம் அடையத் தேவை இல்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தத்தளிக்கிற பல நாடுகளில் நாணய மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. ரூபாய் தனக்கான நிலையை அடையும். கடந்த சில நாட்களாக கண்டு வந்த வீழ்ச்சியிலிருந்து ரூபாயின் மதிப்பு மீண்டும் அதிகரிக்கும். தங்கத்தின் இறக்குமதி குறைந்திருப்பது திருப்தி தருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications