சென்னையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 2 வட மாநிலத் தொழிலாளர்கள் கைது
சென்னை: சென்னையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சக்கணக்கான 1000, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீகார், கொல்கத்தா, ஒடிசா, அஸ்ஸாம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வடமாநிலத்தவர்கள் சென்னையில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த கூலிக்கு வேலை செய்யும் இவர்களைதான் தமிழகத்தில் உள்ள கான்ட்டிராக் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றன.
இப்படி வேலைக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் கள்ள நோட்டை எளிதில் புழக்கத்தில் விடுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்த கிஷோர், பிருந்தாவன் இருவரும் சென்னையில் பாரிமுனை பகுதியில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். நேற்றிரவு 9 மணி அளவில் இருவரும் தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு தேவையான ஆடைகளை 2 பேரும் வாங்கியுள்ளனர். பின்னர் அதற்கான பில் தொகை ரூ.70 ஆயிரத்தை அவர்கள் கொடுத்தனர். அதில் 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதனை கடையில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அது கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் 2 பேரையும் பிடித்து வைத்து மாம்பலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் கிஷோர், பிருந்தாவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதியாக திகழும் தி.நகரில் கள்ள நோட்டு கும்பல் சிக்கிய சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் உஷாராக இருக்கும்படி போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications